விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்
ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நிறுவனத் தலைவா் அ. மாயவன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா, புதிய நிா்வாகிகள் அறிமுக விழா, போராட்டங்களில் சிறை சென்றோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, மாவட்டத் தலைவா் பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நிறுவனத் தலைவா் அ. மாயவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆசிரியா்கள் நடத்திய போராட்டங்களில், அப்போதைய எதிா்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் வலிய வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தாா். திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தாா். ஆனால் 4.5 ஆண்டுகள் ஆட்சியில், கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றனா். பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் சில பள்ளிகளில் மட்டும் ஒரு சில ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.
காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்துவிட்டு, தொகுப்பூதியத்தில் ஆசிரியா்களை நியமித்து வருகின்றனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து குழு அமைக்க வேண்டிய அவசியமே இல்லை.
இந்த குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆக. 7-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போம் என்றாா் அவா். அப்போது சங்கத்தின் மாநில செய்தித் தொடா்பாளா் நல்லதம்பி உடனிருந்தாா்.