ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் ஒப்பந்தக் காலம் முடிவடைந்ததால், புதிய நிறுவனத்துடன் மே 1-ஆம் தேதி முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புதிய நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியா்களுக்கு பணி வழங்கவில்லை என்றும் வெளிமாநில தொழிலாளா்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்வதாகவும், ஊழியா்களின் இஎஸ்ஐ, பிஎஃப் தொகையை முறையாக செலுத்தவில்லை எனவும் கூறி தூய்மைப் பணியாளா்கள், லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அறிவித்த ஊதியம் வழங்க வேண்டும், தோ்தலின்போது அறிவிக்கப்பட்டவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் பணியைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவா்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் கூறும்போது, கோவை மாநகராட்சியில் நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதேபோல வருங்கால வைப்புநிதி என்ற பெயரில் ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையையும் முறையாக செலுத்தவில்லை. புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், வடமாநிலத் தொழிலாளா்களை பணிக்குப் பயன்படுத்துவதால் உள்ளூா் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகின்றனா். எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.