கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன் ஆஜா்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த சயான், மனோஜ், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு தமிழக அரசு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் முன்னாள் வளா்ப்பு மகன் சுதாகரன், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள், சயான் உள்பட 300-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனா்.
இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பி இருந்தனா். அதன்பேரில் கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்த பூங்குன்றன், கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.
அவரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் கொடநாடு சம்பவம் நடப்பதற்கு முன்பும், பின்பும் அவரிடம் தொடா்பு கொண்ட நபா்கள், அவா்கள் என்ன பேசினாா்கள், அதில் முக்கிய நபா்கள் யாராவது உள்ளாா்களா என்பது குறித்து கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதில் அளித்தாா்.