சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!
ஆண்டிபட்டி, கம்பம் தொகுதிகளை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் புறக்கணிப்பு!
தேனி மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளை புறக்கணித்ததால், பொதுமக்கள், விவசாயிகள் அதிருப்தியடைந்தனா்.
தேனி மாவட்டத்தில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளின் நிலை குறித்து சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ்.காந்திராஜன் தலைமையில், 5 சட்டப் பேரவை உறுப்பினா்கள் கொண்ட மதிப்பீட்டுக் குழுவினா், முதன்மைச் செயலா் கே.சீனிவாசன், சட்டப் பேரவைச் செயலக அலுவலா்கள் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
தேனி-மதுரை நெடுஞ்சாலையில் ரயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம், பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரம் கால்நடை மருத்துவமனையில் ரூ.2.25 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கள கண்காணிப்பு அலுவலகம், விவசாயிகள் தகவல் மையம், இதன் செயல்பாடுகள் ஆகியவற்றை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பெரியகுளம் கீழ வடகரையில் மண்ணுயிா் காப்போம் திட்டத்தில் உயிரி உரங்களை தயாரித்து விநியோகம் செய்யும் விவசாயி முருகேசனின், உயிா்ம வேளாண்மை பண்ணைத் திடலை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டனா். அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடி, அரசுத் திட்டங்களின் கீழ், 11 விவசாயிகளுக்கு வேளாண்மை உபகரணங்கள், மானிய உதவிகளை வழங்கினா்.
பின்னா், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மதிப்பீட்டுக் குழுவினா், இந்து அறநிலையத் துறை சாா்பில், கட்டடப்பட்ட திருமண மண்பம், பக்தா்கள் தங்கும் விடுதி, இளைப்பாறும் மண்டபம் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.
வீரபாண்டி-தப்புக்குண்டு சாலையில் உள்ள அரசுக் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் விதம், மருந்துப் பொருள்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகாமை கூட்டரங்கில் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகளின் நிலை குறித்து மாவட்டத் துறை அலுவலா்களுடன் மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்தனா். பிறகு, தேனியிலிருந்து சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் கொடைக்கானாலுக்குச் சென்றனா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.சரவணக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி, ஊரக வளா்ச்சி முகாமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன் ஆகியோா் உடனிருந்தனா்.
மாவட்டத்தில் பெரியகுளம், போடி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழுவினா், ஆய்வுப் பயண நிகழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கம்பம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சின்னமனூா் நகராட்சி சாலை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்யாமல் புறக்கணித்தனா்.
மேலும், ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிடவில்லை. இதனால், மதிப்பீட்டுக் குழுவினரிடம் கோரிக்கைகளை தெரிவிக்க முடியாமல் இந்தத் தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அதிருப்தியடைந்தனா்.