Jessica Radcliffe : Trainer-ஐ தாக்கிக் கொன்றதா Dolphin? Orca | Ramky Group Imper...
ஆண்டிபட்டி: ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் கோயிலில் ஆனந்தமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை அருகில் குரும்பப்பட்டி என்னும் குக்கிராமத்தில் ஸ்ரீ கோகுலகிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணரைக் கொண்டாடும் விதமாக ஹோமம், அபிஷேகம், ஆராதனை என பல நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த பூஜையில் அந்த ஊர் மக்கள், சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கிருஷ்ணரின் பரிபூரண அருளைப் பெற்றனர்.

பலரும் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை வேடங்களிட்டு கோயிலுக்கு அழைத்து வந்து மகிழ்ந்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோயிலின் சிறப்பு பற்றி தெரிந்துகொண்ட பாலாசரஸ்வதி என்ற பக்தர் அவருடைய குடும்பத்தினருடன் திருவாரூரிலிருந்து வந்து ஸ்ரீகோகுலகிருஷ்ணரை தரிசித்தார்.
அவரிடம் இதுகுறித்து கேட்டபோது " எங்கள் குடும்பமே கிருஷ்ணர் மீது மிகவும் பக்தி கொண்ட குடும்பம் எங்க ஊர்லயும் ஸ்ரீபாலகிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அங்கேயும் சிறப்பாகக் கொண்டாடுவோம், கிருஷ்ணரை வேறு வடிவில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தேடும்போது தான் இந்த ஸ்ரீகோகுலக்கிருஷ்ணர் கோயில் பற்றித் தெரிய வந்து இங்கே குடும்பத்துடன் கிளம்பிவந்தோம்.

நாங்கள் கோயிலுக்குள்ளே நுழையும்போது தான் ஹோமம் தொடங்கியது. அதுவே எங்களுக்கு சந்தோசமாக இருந்தது. ஹோமம் அபிஷேகம் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசித்தது மிகவும் நிறைவாக இருந்தது மற்றும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது. தூரத்தில் இருந்து வந்ததுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது" என அவர்களது அனுபவத்தைப் பகிர்ந்தனர். மேலும் அபிஷேக ஆராதனைக்குப் பிறகு மாலை நேரத்தில் இளைஞர்கள் கூடி உறியடி போட்டிகள் நடத்தினார்கள் அதையும் மக்கள் கூடி நின்று ரசித்து மகிழ்ந்தனர். இதன்பின் மக்கள் தங்களுடைய வீடுகளுக்குச் சென்று அங்கும் ஸ்ரீகிருஷ்ணர் பாதம் வரைந்து அவருக்குப் பிடித்த இனிப்பு, காரம் போன்றவை படைத்து வழிபடுவார்கள். இவ்வாறு கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நிறைவுபெற்றது.