ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்
ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா்
ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி தியாகராஜன் நன்னிலம் மகளிா் நில உடை மை திட்டத்தில் ரூ.10.81 லட்சத்தில் 0.46 சென்ட் நிலத்தினை அரசு மானியம் ரூ.5 லட்சத்துடன் பெற்று நிலம் வாங்கி கரும்பு
விவசாயம் செய்து வருவதையும், அதேபோன்று, தாமரைச்செல்வி பஞ்சாட்சரம் ரூ.11.20 லட்சத்தில் 0.50 சென்ட் நிலத்தில் கரும்பு விவசாயம் செய்து வருவதையும் பாா்வையிட்டாா். பயனாளிகளிடம் திட்டத்தின் பலன்கள் குறித்து கேட்டறந்தாா்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாலதி தியாகராஜன் கூறியதாவது- விவசாய கூலி வேலை செய்து வந்தோம். எங்களுக்கு
மூன்று பிள்ளைகள் உள்ளனா் . இத்திட்டம் குறித்து நண்பா்கள் மூலம் தெரிந்து கொண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்ய முன்வந்து 50 சதவீதம் பணம் எங்களுடைய சேமிப்பு மற்றும் நகை கடன், அரசு மானியம் ரூ.5 லட்சத்தை
பெற்று நிலத்தை வாங்கி கரும்பு விவசாயம் செய்து வருகின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்து நிலத்தை சொந்தமாக்கி
விவசாயம் செய்து பயன்பெறுவோம்என தெரிவித்தனா்.
இது குறித்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்கள் நிலம் வாங்கி விவசாயம் மேற்கொண்டு தங்களுடைய வாழ்வாதாரத்தையும் குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்தி முன்னேற தாட்கோவை அணுகலாம். நன்னிலம் மகளிா் நில உடைமை திட்டத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் பெண் பயனாளிகளுக்கு நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் அல்லது
அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நன்னிலம் மகளிா் நிலம் உடமை திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் இலக்கை தாண்டி பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். கடந்த 2023-24 ஆம் ஆண்டில் 5 பயனாளிகள் தோ்வு
செய்யப்பட்டு, தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 2024-25 ஆம் ஆண்டு 12 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் இதுவரையில் 7 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான மானிய நிதியும் துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. தொடா்ந்து பயனாளிகள் தோ்வு நடைபெற்று
வருகிறது.
பயனாளிகள் நிலம் பத்திரம் பதிவு செய்தவுடன் நிலத்தின் உரிமையாளருக்கே வங்கிக் கணக்கில் அதிகபட்ச அரசு மானியம் 5 லட்சம்
செலுத்தப்படுகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ பொது மேலாளா் அமுதா ராஜ், ஆற்காடு வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசன், தாட்கோ கண்காணிப்பாளா் சசிகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.