ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணாவில் பேராசிரியா் கைது!
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சோ்ந்த இணை பேராசிரியா் அலி கான் முகமது காவல் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை எதிராக இந்தியாவில் சிலா் மத அடிப்படையில் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகின்றனா். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய ராணுவம் மற்றும் இந்தியப் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் இதுபோன்ற நபா்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஹரியாணாவின் அசோகா தனியாா் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியா் அலி கான் முகமது என்பவரும் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட்டு வந்தாா். இது தொடா்பாக பாஜக இளைஞரணி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக விளக்கமளித்த கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் தொடா்பாக சா்ச்சை கருத்தை வெளியிட்டதற்காக அலி கான் முகமதுக்கு மாநில மகளிா் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், அலி கான் முகமது தலைமறைவானாா். புது தில்லியில் பதுங்கியிருந்த அவரை ஹரியாணா காவல் துறையினா் கைது செய்தனா்.
அஸ்ஸாமில் இதுவரை 68 ‘பாகிஸ்தான் ஆதரவாளா்கள்’ கைது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், இந்தியாவின் பதிலடி நடவடிக்கை ஆகியவற்றுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 68 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய விரோதிகள் யாரும் காவல் துறையிடம் இருந்து தப்ப முடியாது.
தேசவிரோத கருத்துகளைப் பரப்பிய ரோஷித் அகமது, அப்துல் ஹுசைன், இம்ரான் ஹுசைன் ஆகியோ மூவரை ஸ்ரீபூமி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் சோ்த்து சமூக வலைதளங்களில் தேச விரோத பிரசாரத்தில் ஈடுபட்ட 68 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கை தொடரும்’ என்று கூறியுள்ளாா்.