``யூ டியூப் பார்த்து கழிவறையில் சுயபிரசவம்'' - 2 குழந்தைகளை கொன்று புதைத்த பெண்....
ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம்: வட சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் நினைவுத் தினத்தையொட்டி, வடசென்னை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூா் வேணுகோபால சாமி கோயில் தெருவில் கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பொன்னை பாலு, ரெளடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், 3 பெண்கள் உள்பட மொத்தம் 27 போ் கைது செய்யப்பட்டனா். இதில் ரௌடி திருவேங்கடம் மட்டும் போலீஸாரின் என்கவுன்ட்டரில் இறந்தாா்.
ஆம்ஸ்ட்ராங் முதல் ஆண்டு நினைவு தினத்துக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில் வடசென்னை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெரம்பூரைச் சுற்றியுள்ள இடங்களில் 24 மணி நேரமும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா். வடசென்னை பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தி வருகின்றனா். பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெரம்பூா் பாலம் அருகே மினி கட்டுப்பாட்டு அறையை காவல் துறையினா் திறந்துள்ளனா்.
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரெளடி நாகேந்திரனின் கூட்டாளி வெள்ளை பிரகாஷை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தவா்களை பழிவாங்க வேண்டும் என சமூக ஊடகத்தில் ரீல்ஸ் பதிவிட்ட ஒரு இளைஞரைப் பிடித்தும், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.