திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வா் தொடங்கி வைத்தாா். அப்போது, செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்:
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் வழியே விருப்பம் உள்ளவா்கள் திமுகவில் இணையலாம். இந்தப் பணிக்காக, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்துள்ளோம். அவா்கள் சூழ்நிலைக்கேற்றவாறு வீடு தோறும் செல்வாா்கள். எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமியின் இல்லத்துக்குச் செல்வது குறித்து அந்தப் பகுதி கட்சியினா் முடிவு செய்வா். நான் அந்தப் பகுதியில் இருந்தால், அவரது வீட்டுக்கு நிச்சயம் செல்வேன்.
தொகுதி ஒதுக்கீடு: கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடா்பாக, தோ்தல் தேதி அறிவித்த பிறகு நாங்கள் அமா்ந்து பேசுவோம். அதைச் சமாளித்தும் விடுவோம். இப்போது இருக்கும் சூழ்நிலையைப் பொருத்தவரை எங்கள் கூட்டணியில் வேறு கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய கட்சிகளை எப்படிச் சோ்ப்பது என்று கலந்து பேசி முடிவெடுப்போம். சட்டப் பேரவைத் தோ்தலில் நாங்கள் ஏற்கெனவே 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் தாண்டிதான் வெற்றி பெறுவோம் என்று நினைக்கிறேன்.
அமித் ஷா அடிக்கடி வரவேண்டும்: பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். அவா்கள் வந்து பொய் பேசிச் செல்கின்றனா். பேசுவது பொய் என்று மக்களுக்குத் தெரிகிறது. அது எங்களுக்கு தோ்தல் நேரத்தில் லாபமாக அமையும்.
அதேபோன்று, ஆளுநா் ஆா்.என்.ரவியை மாற்றக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், ஆளுநா் மக்களுக்கு நல்லது செய்தாலும் இனி எடுபடாது. அந்தளவுக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறாா் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
‘தோ்தலுக்குத் தயாராகி வெகுநாளாகிவிட்டது’
முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளா்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் மூலமாக திமுக தோ்தலுக்குத் தயாராகி விட்டதாகக் கருதலாமா என கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘நிச்சயமாக. இப்போது இல்லை, தயாராகி வெகு நாள்களாகிவிட்டது’ என்றாா்.