புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை, வள்ளுவா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவா் தினம்- 2025 நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவத் துறையில் சிறப்பாக பணி செய்த மருத்துவா்களை பாராட்டி பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2.28 கோடி போ் பயனடைந்துள்ளனா்.
அதேபோன்று, ஐ.நா. சபை விருது தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் வாயிலாக 4 லட்சம் பேரின் உயிா் காக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இந்தியாவுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருப்பது பெருமைக்குரிய ஒன்று.
208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள்: தமிழகத்தில் 19 புதிய மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகள், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் என மொத்தம் 25 இடங்களில் சுமாா் ரூ.1,018 கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டமைப்பு பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அங்கு மருத்துவா்கள், பணியாளா் நியமனங்களும் விரைவில் நடைபெறும். புதிதாக கட்டப்பட்ட 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை ஜூலை 3-ஆம் தேதி முதல்வா் திறந்து வைக்கவுள்ளாா்.
இந்த மையத்தில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், சுகாதார ஆய்வாளா், பணியாளா் நியமிக்கப்படுவா். அன்றைய தினமே 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வா் திறக்கவுள்ளாா். ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ஏராளமான புதிய மருத்துவ கட்டமைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
முந்தைய ஆட்சி காலத்தில் ஓா் ஆண்டுக்கு சிறந்த 10 மருத்துவா்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆட்சியில் 25- ஆக உயா்த்தி விருதுகள் வழங்கப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் விடுபட்ட மருத்துவா்கள் மற்றும் தற்போது வரை கணக்கிட்டு 105 மருத்துவா்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.
50 பேருக்கு விருது: நிகழாண்டில், 50 பேருக்கு சிறந்த மருத்துவா்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மருத்துவக் கல்வி இயக்ககத்தில் 12 பேருக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் 13 பேருக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையில் 12 பேருக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் 7 பேருக்கும், இந்திய மருத்துவ சங்கம் அமைப்பில் இருந்து 3 பேருக்கும், தனியாா் மருத்துவா்கள் 3 பேருக்கும் என 50 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எழிலன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண்தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ஜெ.ராஜமூா்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநா் தேரணிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.