கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
ஆர்சிபி கூட்டநெரிசல்: பெங்களூர் கூடுதல் ஆணையரின் பணியிடை நீக்கம் ரத்து!
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விவகாரத்தில் பெங்களூர் கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகாப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற காரணத்துக்காக பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த், கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் உள்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இந்த பணியிடை நீக்கத்துக்கு எதிராக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கூடுதல் ஆணையர் விகாஷ் குமார் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், மனுவை விசாரித்த மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபியே பொறுப்பேற்க வேண்டும் என்றும், விகாஷ் குமாரின் இடைநீக்கத்தை ரத்து செய்து முந்தைய பணியிடத்திலேயே அவரை பணியமர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“முதல்கட்ட விசாரணையில் மூன்று முதல் ஐந்து லட்சம் பேர் கூடியதற்கு ஆர்சிபி பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிகிறது. காவல்துறையிடம் உரிய அனுமதியோ சம்மதத்தையோ பெறவில்லை. சமூக ஊடகத்தில் திடீரென்று அவர்கள் பதிவிட்டதன் விளைவாக மக்கள் கூடியுள்ளனர்.
12 மணிநேரத்துக்குள் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. காவல்துறையினர் மனிதர்கள், அவர்கள் கடவுளோ, மந்திரவாதியோ கிடையாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Central Administrative Tribunal has quashed the order suspending Bangalore Additional Commissioner of Police Vikash Kumar in the RCB victory celebration case.