சித்தராமையாவே முதல்வராக தொடருவார்! -டி.கே.சிவகுமார் திட்டவட்டம்
பெங்களூரு: ‘கர்நாடக முதல்வராக சித்தராமையாவே தொடருவார்’ என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மாற்றம் குறித்து பேச்சு அடிபட்டது.
இதனிடையே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலரும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த கர்நாடகம் வருகை தந்துள்ளார்.
ஆலோசனைக்குப்பின் அவர் இன்று(ஜூலை 1) துணை முதல்வர் சிவகுமாருடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது சுர்ஜேவாலா பேசுகையில், “தலைமை மாற்றம் குறித்த கேள்விக்கான ஒரே பதில் ‘அப்படியெதுவும் இல்லை’ என்பதே” என்று மீண்டுமொருமுறை இன்று தெரிவித்தார்.
இதனையே வலியுறுத்திய சிவகுமார் பேசுகையில், “எம்.எல்.ஏ.க்களை சந்தித்து மனுக்களை பெறவே சுர்ஜேவாலா இங்கு வருகை தந்தார். மேலும், அவர் கட்சிக்குள் ஒழுக்கத்தை கொண்டுவர கட்சி வளர்ச்சிக்கான சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்த ஆலோசனையில் தலைமை மாற்றம் குறித்தோ அமைச்சரவை விரிவாக்கம் பற்றியோ எதுவும் விவாதிக்கப்படவில்லை. அதற்கான அவசரம் எங்களிடம் இல்லை. எங்களுடைய இலக்கு 2028 தேர்தலைப் பற்றியே இருக்கிறது” என்றார்.
Siddaramaiah to remain CM