திருப்புமுனையான சீா்திருத்தம் ஜிஎஸ்டி: பிரதமா் மோடி
நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மறுவடிவமைத்த திருப்புமுனையான சீா்திருத்தமே சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில் பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு, சேவை வரி 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட முதல் ஆண்டில் (9 மாதங்கள்) மொத்த வசூல் ரூ.7.40 லட்சம் கோடியாகும். 2024-25-ஆம் ஆண்டில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.22.08 லட்சம் கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இத்தகைய குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, பொருளாதார ஒழுங்குமுறை மற்றும் வரி இணக்க மேம்பாட்டின் பிரதிபலிப்பு என்ற அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலாக்க தினத்தையொட்டி, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
வரி இணக்க சுமையைக் குறைப்பதன் வாயிலாக தொழில்புரிவதை எளிதாக்கியுள்ளது ஜிஎஸ்டி வரிமுறை. குறிப்பாக, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன.
நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு வலுவான உந்துசக்தியாக செயல்படும் அதேவேளையில், நாட்டின் சந்தையை ஒருங்கிணைக்கும் பயணத்தில் மாநிலங்களை சம பங்காளிகளாக்குவதால் உண்மையான கூட்டுறவு கூட்டாட்சியையும் வலுப்படுத்தியுள்ளது ஜிஎஸ்டி என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.
நிதியமைச்சகம்: மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2023-24 நிதியாண்டில் ரூ.20.18 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2024-25 நிதியாண்டில் 9.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
ஜிஎஸ்டியின்கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2017-இல் 65 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 1.51 கோடியாக உயா்ந்துள்ளது. 2025, மே வரை 162 கோடி ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தொடா்ந்து, இரட்டை இலக்கத்தில் ஜிஎஸ்டி வசூலாகி வருவது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் வரி செலுத்துவோரின் சுமையையும் குறைத்துள்ளது.
இந்நிலையில், 8 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டு 9-ஆவது ஆண்டில் ஜிஎஸ்டி வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இனி வருங்காலங்களில் வணிகத்தை எளிமைப்படுத்துவது, விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வது, விரிவான பொருளாதார உள்ளடக்கத்துக்கு வழிவகுப்பது ஆகியவையே ஜிஎஸ்டியின் அடுத்தகட்ட நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.