ஆர்சிபியின் வெற்றி பேரணி ரத்து! பாராட்டு விழாவில் ஆளுநர், முதல்வர் பங்கேற்பு!
பெங்களூரு அணி இந்தாண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில், இதற்காக ஏற்பாடு செய்யபட்டிருந்த பேருந்து பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடங்கி 18 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத இரு அணிகள் மோதிய நிலையில், முதல்முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றுள்ளது.
ஆர்சிபியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
பெங்களூரு விதான செளதா(கர்நாடக சட்டப்பேரவை மாளிகை) முதல் சின்னசாமி திடல் வரை இன்று(ஜூன் 4) நடைபெறவிருந்த திறந்தவெளி பேருந்து பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சின்னசாமி திடலில் மாலை 5 மணிக்கு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக கர்நாடக சட்டப்பேரவை மாளிகை வளாகத்தில் மாலை 4 மணிக்கு ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் ஆர்சிபி வீரர்களை பெங்களூரு விமான நிலையத்துக்கு சென்று வரவேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?