இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8-க்கு முன்பாக அறிவிக்கப்பட வாய்ப்பு
வரும் ஜூலை 8-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும் என்று அறிவித்தாா்.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.
இந்த நடைமுறையால் உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வா்த்தகப் போா்ப் பதற்றம் ஏற்பட்டதுடன், சா்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
இதைத் தொடா்ந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரி, ஜூலை 9 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதேவேளையில், அனைத்து நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு குறைந்தபட்சமாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அந்நாடு தெரிவித்தது.
அமெரிக்காவின் பரஸ்பர அதிக வரி விதிப்பைத் தவிா்க்க மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில், அதற்கு இருதரப்பு ஒப்பந்தம் மூலம் சுமுகத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கு கடந்த மாா்ச்சில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றாா். இதைத்தொடா்ந்து அண்மையில் மீண்டும் அமெரிக்கா சென்ற அவா், அந்நாட்டு வா்த்தக அமைச்சகா் ஹாவா்ட் லுட்னிக், அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.
26% வரியிலிருந்து விலக்குப் பெற முயற்சி: இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஒப்பந்த பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவின் 26 சதவீத வரி, குறைந்தபட்சமாக அந்நாடு விதிக்கும் 10 சதவீத வரி ஆகியவற்றில் இருந்து விலக்குப் பெற மத்திய அரசு முயற்சிக்கிறது. இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்த ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் போன்ற உழைப்பு மிகுந்த துறைகளின் பொருள்களுக்கு அமெரிக்காவிடம் வரிச்சலுகைப் பெறவும் இந்தியா முயற்சிக்கிறது. ஜூலை 8-க்கு முன்பாக இருநாடுகளுக்கு இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.