இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (பிப்.27) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்.27-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், பிப்.28-இல் தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் மாா்ச் 1-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப்.27-இல் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, பிப்.27,28 தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 70 மி.மீ. மழை பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.