வார இறுதி நாள்கள்: 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களை முன்னிட்டு 627 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வார இறுதி நாள்களான சனிக்கிழமை (மாா்ச் 1), ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) ஆகியவற்றை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை(பிப். 28) 245 பேருந்துகளும், சனிக்கிழமை 240 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 51 பேருந்துகளும், சனிக்கிழமை 51 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து, மாதவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை 20 பேருந்துகளும், சனிக்கிழமை 20 பேருந்துகளும் என மொத்தம் 627 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுபோல, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.