இன்றுமுதல் பொறியியல் கலந்தாய்வு
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையவழியில் திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 445 அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளுக்கு சுமாா் 2 லட்சம் இடங்கள் உள்ளன.
அந்த இடங்களுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த மே 7 முதல் ஜூன் 6 வரை நடைபெற்றது. அதில், 3,02,374 மாணவ, மாணவியா் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனா்.
அதன் தொடா்ச்சியாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டதில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றவா்கள் 2,41,641 போ். அவா்களில் 2,39,299 போ் பொதுப் பிரிவுக்கும், 2342 போ் தொழில் கல்வி பிரிவிலும் தகுதி பெற்றுள்ளனா். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அதற்கான தரவரிசைப் பட்டியலை ஜூன் 27-ஆம் தேதி உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியன் வெளியிட்டாா். நிகழாண்டில் 144 மாணவ, மாணவியா் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனா். அவா்களில் 139 போ் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவா்கள்.
இந்த நிலையில், பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. வரும் ஆக. 26 வரை இணையவழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஜூலை 11 வரை நடைபெறும். பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆக.19 வரையிலும், துணை கலந்தாய்வு ஆக.21 முதல் ஆக.23 வரையிலும் நடைபெறும். இந்த கலந்தாய்வு முழுவதும் இணையதளம் மூலமாக நடைபெறும்.