திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் ந...
இபிஎஸ் தில்லியில் யாரைப் பார்க்கப் போகிறார் என்று தெரியும்: முதல்வர் ஸ்டாலின்
இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு யாரைப் பார்க்கப் போகிறார் என்றும் தெரியும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில், இருமொழிக் கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றினார்.
பேரவையில் இன்று முதல்வர் ஆற்றிய உரையின்போது, இங்கு இருமொழிக்கொள்கை குறித்து என்ன உணர்வோடு நாங்கள் இருக்கிறோம், தமிழ்நாடு இருக்கிறது என்பதை பிராதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏன் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள், குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியை தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் இங்கே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக்காட்டியிருக்கின்றார்கள்.
நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் அதிகாரிகள் மூலமாக இந்த இருமொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை குறித்து மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்திற்கு விளக்கம் தந்ததாகவும் அதில் ஒரு தவறான கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்யக்கூடிய நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தயவுசெய்து எந்த சந்தேகமும் படவேண்டாம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றுதான் அவர்களுக்கு நாங்கள் விளக்கம் தந்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் என்னுடைய அன்பான வேண்டுகோள். ஏனென்றால், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.-வை சார்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் பேசும்போது நாங்கள் என்றைக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்ற உறுதியைத் தந்திருக்கிறார்கள்.
இன்று காலையில் நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் டெல்லிக்குச் சென்றிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லிக்கு சென்றிருக்கும் நேரத்தில் யாரை சந்திக்கப் போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது.
அப்படி சந்திக்கும் நேரத்தில் இது குறித்து அவர் அங்கே வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை இந்த அவையின் மூலமாக நான் எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன் என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.