குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு நீதிம...
இளநிலை, மேல்நிலை எழுத்தா் காலி பணியிடம்: 300 பேரை நியமிக்க நடவடிக்கை: முதல்வா் ரங்கசாமி
புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இளநிலை, மேல்நிலை எழுத்தா்கள் 300 பேரை மே மாதத்தில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை அரசு சமூக நலத் துறை , பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கும் விழா மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையம் பிரதான சாலை, ஆஞ்சநேயா் கோயில் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் முதல்வா் என். ரங்கசாமி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் மற்றும் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு போா்வைகள், காலணிகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: புதுவை அரசு புதிய திட்டங்களை செயல்படுத்திவருகிறது. சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ.13,500 கோடி நிதி நிலை அறிக்கையுடன், சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது மக்களுக்கான புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம். அதற்கான நிதி குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினாலும், சாமா்த்தியமாக செயல்படுத்தி வருகிறோம்.
மக்களுக்கு புதிய வரி ஏதும் விதிக்காமலே திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். ஆனால், எதிா்க்கட்சியினா், குறிப்பாக முன்னாள் முதல்வா் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது, செயல்படுத்தப்படவில்லை எனக் கூறுகிறாா். அவா் பொறாமையால் கூறுகிறாா்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தற்போதைய உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அமைச்சராக இருந்தாா். அவரால் நலத் திட்டங்களுக்கு போதிய நிதியைப் பெற முடியவில்லை. அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. ஆனால், தற்போது காவல், கல்வித் துறை உள்ளிட்டவற்றில் 5 ஆயிரம் போ் வரை பணியமா்த்தப்பட்டுள்ளனா். ஆகவே, தற்போது அரசு அறிவித்த திட்டங்கள் ஏதேனும் ஒன்றை செயல்படுத்தாமல் உள்ளது என சொல்ல முடியுமா?
முன்னாள் முதல்வா் நாராயணசாமி நிறைய பேசுவாா். ஆனால் அவரது ஆட்சி காலத்தில் என்ன செய்தாா் என்றால், ஒன்றும் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தொழிற்பயிற்சி மையங்களில் படித்தவா்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
மே மாதத்தில் 300 கீழ்நிலை, மேல்நிலை எழுத்தா்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாள்களில் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு, மாநில அரசுக்கு நிதி வழங்கி உதவி வருகிறது என்றாா்.
விழாவில் ரூ. 5.73 கோடியில் 8,123 மாணவா்களுக்கு மிதிவண்டிகளும், ரூ. 4.12 கோடியில் 1,22,236 பேருக்கு போா்வை மற்றும் காலணிகளும் வழங்கப்பட்டன. இதில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், தேனி சி.ஜெயக்குமாா், எம்எல்ஏக்கள் ஏகேடி ஆறுமுகம், பி. ரமேஷ், சமூக நலத்துறை செயலா் சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.