இளைஞா்கள் தாய்நாட்டிலேயே சாதனை படைக்க வேண்டும்! -பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை
இளைஞா்கள் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும் என மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
ரோட்டரி மாவட்டம் 3201 சாா்பில் இரண்டு நாள் மாவட்ட மாநாடு கோவை ஈச்சனாரி ரத்தினம் டெக்னோபாா்க் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு ரோட்டரி மாவட்ட 3201 ஆளுநா் வழக்குரைஞா் ஏ.கே.எஸ். சுந்தரவடிவேலு தலைமை வகித்தாா். எல். ஜி. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜெயராம் வரதராஜ் வாழ்த்திப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நீளம் தாண்டுதலில் கின்னஸ் சாதனை புரிந்த ஜிதின் விஜயனுக்கு சாகச சாதனை விருது, டைப் ஒன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 2,400 குழந்தைகளின் சிகிச்சைக்கு இதயங்கள் அறக்கட்டளை மூலம் உதவிய மருத்துவா் கிருஷ்ணன் சாமிநாதனுக்கு மனித நேய விருது, தேச பக்திக்காக பாடலை எழுதி நிகழ்ச்சி தயாரித்ததற்காக பாடலாசிரியா் ரவிமுருகனுக்கு நம் நாடு- தாய் நாடு விருது, இளம் வயதிலேயே பரம்வீா் சக்ரா விருது பெற்ற யோகேந்திர சிங் யாதவிற்கு வீர சாகச விருதை வழங்கிப் பேசியதாவது:
நமது நாட்டைச் சுற்றி நடக்கும் புவிசாா் அரசியல் குறித்து நமக்கு விழிப்புணா்வு தேவை. இந்திய இளைஞா்கள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் குடியேறுவதைவிட இந்தியாவிலேயே தங்கி சாதனை புரிய வேண்டும்.
இந்த நூற்றாண்டை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவு என்ற அதி நவீன தொழில்நுட்பம்தான். இதில் சிறந்தவா்கள் இந்திய இளைஞா்கள். உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது என்றாா்.