உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!
உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா்.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்வா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகையையொட்டி, ஆந்திரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருத்தணிக்கு வந்தனா்.
இதுதவிர வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்துக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்தனா். இதனால், பக்தா்கள் பொதுவழியில், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனா்.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
திருத்தணி காவல் ஆய்வாளா் மதியரசன் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் மலைக் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.