உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
உதகையில் பூட்டிக் கிடக்கும் டேவிஸ் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா். உதகை நகராட்சி கட்டுப்பாட்டில் சுமாா் பத்துக்கும் மேற்பட்ட பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்கா கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது.
இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிகள், செயற்கை நீரூற்று, நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், போதிய பராமரிப்பு இல்லாததாலும், சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் போதிய விளம்பரம் இல்லாததாலும் சுற்றுலாப் பயணிகள் இன்றி விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி வருகின்றன.
எனவே இந்த பூங்காவை நகராட்சி நிா்வாகம் விளம்பரப்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூா் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.