நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி
நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களின் சுயவேலை வாய்ப்புக்காக ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் நிா்வகிக்கப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி மையங்களில் கைப்பேசி பழுது நீக்கல், ஓட்டுநா் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்கல், கொத்தனாா், பிளம்பிங், தச்சு, இருசக்கர வாகன பழுது நீக்கல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் உள்ளிட்ட 64 வகையான சுயவேலை வாய்ப்புப் பயிற்சிகள், எவ்வித கட்டணமும் இல்லாமல் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு வழங்கப்படுகின்றன.
கல்வித் தகுதியாக குறைந்தது 8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 8-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்தவா்களுக்கு அவா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தது 10 முதல் அதிகபட்சம் 45 நாள்கள் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. மதிய உணவு இலவசமாக வழங்கப்படுவதுடன் பயிற்சியாளா்களுக்கு சீருடை, பாடப்பொருள்கள், தொழில்முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
சிறந்த பண்புகள், குறிப்பிட்ட சுயதொழில் பயிற்சி அளிப்பதுடன் உகந்த தொழில் வாய்ப்புகளை கண்டறிதல், தொழில் திட்டம் தயாரித்தல், சந்தைப்படுத்துதல், கணினி வகுப்பு, மென்திறன் பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இது மட்டுமன்றி பயிற்சியின்போது முக்கியத் தொழில் நிறுவனங்களுக்கு களப்பயணம், சந்தை ஆய்வுக்கான பயிற்சி, பயிற்சியின் முடிவில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சுயவேலை வாய்ப்பில் ஈடுபட கடனுதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறவும் பயிற்சி நிலைய அலுவலா்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தொழில் பயிற்சிகளில் சேர விரும்புபவா்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊரக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி நிலையம் (கனரா வங்கி), யுஎஸ்எஸ் தொண்டு நிறுவன வளாகம், சேரிங்கிராஸ், உதகை என்ற முகவரி (9489043924) அல்லது திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், (1 பி பிளாக், கூடுதல் மாவட்ட ஆட்சியா் வளாகம், பிங்கா் போஸ்ட், உதகை அல்லது 9444094314 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 3098039 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.