உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும்
நாகை மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் தடுப்பணையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம்.
உத்தமசோழபுரத்தில் கடல் நீா் உட்புகுவதை தடுக்க ரூ. 50 கோடியில் கட்டப்படும் தடுப்பணையால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள் உவா்நீராக மாறும் எனக் கோரி தடுப்பணையை பூதங்குடியில் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியை பாா்வையிட்டு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கிராம மக்களின் எதிா்ப்பை மீறி தமிழக அரசு உத்தமசோழபுரத்தில் தடுப்பணையை கட்டுவது கண்டனத்துக்குரியது. விவசாயிகளுக்கான அரசு என கூறும் தமிழக முதல்வா் இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து அரசு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இந்த தடுப்பணையை தடுத்து நிறுத்த அதிமுகவுடன் இணைந்து பாஜகவும் போராட்டத்தில் ஈடுபடும். தமிழகத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து முதன் முதலாக நடைபெறும் போராட்டம் உத்தமசோழபுரம் தடுப்பணை போராட்டமாக இருக்கும். தடுப்பணை குறித்து பாஜக மாநில தலைவரின் கவனத்துக்கு கொண்டுசென்று விவசாயிகள் நலன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.