உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?
கிரிக்கெட் திடலில் இருந்த உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
உலகிலேயே அதிக வருவாய்மிக்க கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியத்தின்கீழ் 50-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கும் மைதானங்களில் மட்டுமே முக்கியமான சர்வதேசப் போட்டிகளும் ஐபிஎல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதனால், இந்த மைதானங்கள் மட்டுமே தொடர்ச்சியாக அதிகளவிலான ரசிகர்கள் வருகையாலும் நிரம்பி வழிகின்றன.
ஆங்காங்கே இருக்கும் தரம்சாலா, ஒடிசாவின் கட்டாக் போன்ற மைதானங்களில் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே போட்டிகள் நடத்தப்படுவதாலும், ஐபிஎல் போட்டிகள்கூட நடத்தப்படாத நிலையில் போதிய பராமரிப்பின்றி உள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஒடிசாவின் கட்டாக் மைதானத்தால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் 2-வது போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் அமைந்துள்ள பராபதி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் தொடர்ச்சியாக விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் 305 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து தொடரையும் கைப்பற்றியது.
இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸின் 6-வது ஓவரின்போது மைதானத்தில் இருந்த உயர்கோபுர மின் விளக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் போட்டி 35 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இது பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களை எழுப்பிய நிலையில் இது குறித்து முறையான விளக்கமளிக்க ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க... லபுஷேனுக்கு தேவை அதிர்ஷ்டம்..! ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை!
ஒடிசா விளையாட்டுத் துறையின் இயக்குநர் சித்தார்த் தாஸ் மாநில கிரிக்கெட் சங்கச் செயலர் சஞ்சய் பெஹ்ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இவ்வளவு முன்னேற்பாடுகள் இருந்தபோதிலும் இது போன்ற பெரிய தவறு நடந்தது எப்படி? என்பது குறித்து 10 நாள்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக 2022 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்குகள் எவ்வாறு பழுது ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இதுகுறித்து ஒடிசா கிரிக்கெட் சங்க செயலர் சஞ்சய் பெஹ்ரா கூறுகையில், “ ஒவ்வொரு கோபுரமும் இரண்டு ஜென்ரேட்டர்களால் இணைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கில் பொறுத்தப்பட்டிருந்த ஜென்ரேட்டர் பழுதடைந்ததால், அடுத்த ஜெனரேட்டருக்கு மாற்றுவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டது. இதுவே தாமதத்துக்கு காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் எம்எல்ஏ அருண் சாஹூ, “சர்வதேச போட்டிகளை நடத்துவதில் மாநில அரசு எவ்வளவு உறுதியாக உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. இந்தச் சம்பவம் ஒடிசாவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டது” என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ சோபியா ஃபிர்தவுஸ் கூறும்போது, “பராபதி ஸ்டேடியத்தில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.