உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு: தென்னாப்பிரிக்கா! 5-வது இடத்தில் இந்தியா!
உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது.
இந்த தரவரிசையில், அமெரிக்கா மற்றும் இந்தியா முறையே 3 மற்றும் 5-ஆவது ஆபத்தான நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
வாகனம் ஓட்டுவதற்கு உலகின் பாதுகாப்பான நாடாக நாா்வே தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நீடிக்கிறது. அதேநேரம், தென்னாப்பிரிக்கா தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக ஆபத்தான நாடாகத் திகழ்கிறது.
சாலை வேக வரம்புகள், சாலை போக்குவரத்து இறப்பு விகிதங்கள் உள்ளிட்ட அளவீடுகளின் அடிப்படையில் உலக நாடுகளை வாகனம் ஓட்டுவதற்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் ஆபத்தான நாடுகள் என்று பட்டியலிட்டதாக ஜுடோபி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட அனைத்து நாடுகளிலும் சாலை போக்குவரத்து இறப்பு எண்ணிக்கை (சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு) 8.9-லிருந்து 6.3-ஆகக் குறைந்துள்ளது. அதேநேரம், ஒவ்வொரு நாட்டிலும் வேக வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தென்னாப்பிரிக்காவில் பல சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், ஊழலில் மலிந்த போக்குவரத்து அதிகாரிகளால் வாகன ஓட்டிகள் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில்லை’ என்று அந்நாட்டில் வாகன உரிமங்களுக்கு ஏற்பாடு செய்யும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் அலிஷா சின்னா கூறினாா்.