உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: போரினால் மகிழ்ச்சியான பின்லாந்து; இந்தியாவின் இடம் என்ன?
தொடர்ந்து 8-வது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற படத்தைப் பெற்றிருக்கிறது பின்லாந்து. மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் இந்தியாவோ அமெரிக்காவோ பிரகாசிக்காதது ஏன்?
கடந்த மார்ச் 20-ம் தேதி, ஐ.நாவின் சர்வதேச மகிழ்ச்சி தினத்தில் வெளியான வருடாந்திர அறிக்கையில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் மகிழ்ச்சி, சமூக நம்பிக்கை குறைந்து வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த உலக மகிழ்ச்சி அறிக்கையின் நிறுவன ஆசிரியர் (founding editor) ஜான் ஹெல்லிவெல், மக்கள் நினைப்பதை விட அவர்களது சுற்றத்தினர் அதிக அக்கறையுடன் நடந்துகொள்கின்றனர் என அறிக்கையில் தெரியவந்ததாகக் கூறியுள்ளார்.
நாடுகளின் மகிழ்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது?
உலக நாடுகளின் மகிழ்ச்சியை கணக்கிட, ஆறு முக்கிய கூறுகளை கவனிக்கின்றனர்.
1. தனிநபர் ஜி.டி.பி
நாட்டின் பொருளாதார வலிமை, தனிநபரின் வருமானம் மற்றும் வாழ்க்கைமுறையை பாதிக்கிறது.
2. சமூக ஆதரவு
இது ஒரு தனிநபர் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அரசினால் எவ்வளவு ஆதரிக்கப்படுகிறார் என்பதை மதிப்பிடுகிறது.
3. ஆரோக்கியம் மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு
அதிக ஆயுள் இருக்கும் மக்கள் ஆரோக்கியமாகவும் நிறைவாகவும் வாழ்கின்றனர்.
4. சுதந்திரம்
ஒரு தனிமனிதர் தனது வாழ்க்கையின் மீது முழு சுதந்திரமாக, தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதை குறிக்கிறது.

5. தாராள மனப்பான்மை
தொண்டு, பொது நன்கொடைகள் மற்றும் சேவைகளில் மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அளவிடுகிறது.
6.ஊழல் பற்றிய கருத்துகள்
ஊழல் குறைவாக இருந்தாலோ, ஊழல் இல்லாமல் இருந்தாலோ குடிமக்களுக்கு அரசின் மீது அதிக நம்பிக்கை இருக்கும்.
நோர்டிக்கு நாடுகள் என அழைக்கப்படும் வட துருவ ஐரோப்பிய அதிகம் மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கை கூறுகின்றது .
பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முதல் 4 இடத்தில் இருக்கின்றன. நார்வே 7-வது இடத்தில் இருக்கிறது .
Finland மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?
மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடன் வசிக்கும் நபர்கள் பற்றி அக்கறை கொண்டிருப்பதுதான் பின்லாந்து நாட்டின் மகிழ்ச்சிக்கான ரகசியம் என ஹெல்லிவெல் கூறுகின்றார்.
1939-40ல் நடந்த ரூசோ - பின்னிஷ் போருக்கு பிறகு மக்களிடையே உருவான ஒற்றுமை மற்றும் நம்பிக்கைதான் இதற்கு காரணம் என பின்லாந்து அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது இருந்த சமத்துவமின்மையை போக்கியதில் மிகப் பெரிய பங்குவகிக்கிறது.
"அந்த போரில் அவர்கள் வெல்லவில்லை என்றாலும், ஒற்றுமையாக இருக்கும்போது எத்தனை பெரிய சக்தியையும் அவர்களால் எதிர்க்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டனர்" என்கின்றனர்.
பின்லாந்து மக்களிடம் உள்ள குறைவான பொருள் முதல்வாத (less meterialistic) மனநிலையும் இதற்கு காரணம் என்கின்றனர்.

டாப் 10 நாடுகள், இந்தியாவின் இடம்...
2025 அறிக்கையில் இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகள் டாப் 10 வரிசையில் இணைந்திருக்கின்றன. ஒன்று கோஸ்டாரிக்கா (6ம் இடம்) மற்றொன்று மெக்சிகோ (10ம் இடம்).
இரண்டு நாடுகளுமே வலுவான சமூக அமைப்பைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் செல்லும் திசை மற்றும் தலைவர்கள், நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர்.
டாப் 10 நாடுகளைப் பொறுத்தவரை நெதர்லாந்து 5-வது இடத்திலும், இஸ்ரேல் 8-வது இடத்திலும், லக்ஸம்பெர்க் 9-வது இடத்திலும் உள்ளன.

அமெரிக்கா முதல்முறையாக டாப் 20 இடங்களைத் தவறவிட்டு, 24-வது இடத்தில் உள்ளது. ஆனால் கனடா 18-இடத்தை தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து 23வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இடம் என்ன என்பது உங்கள் மனதிலிருக்கும் கேள்வி என்பதை அறியமுடிகிறது. இந்தியா 118-வது இடத்தில் உள்ளது.
இது மிகவும் மோசமான நிலைதான் என்றாலும், கடந்த ஆண்டின் 126-வது இடத்தில் இருந்து சில படிகள் முன்னேறியிருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இந்த பட்டியலில் கடைசி இடங்களில், ஆப்கானிஸ்தான் (147) , சியரா லியோன் (146), லெபனான் (145), மலாவி (144) மற்றும் ஜிம்பாபேவே (143) நாடுகள் இருக்கின்றன.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
