Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வ...
பகுதி நேர வேலையாக மணிரத்தினம் படத்தில் நடித்த அனுபவம் - 80s Kids கல்லூரி நினைவலை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அது 2002-ம் ஆண்டு, சென்னையில் எனது கல்லூரிக் காலம். கல்லூரிக் காலத்தில் சென்னை அண்ணா சாலையில், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா என அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா, அன்றைய காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக தனக்கு சொந்தமான இடத்தில் விடுதியை அமைத்து படிக்க வழி செய்தார். இதை அறிந்து கொண்ட நானும் தேனியில் இருந்து அந்த விடுதியில் தங்கி படிக்க வந்தேன்.
கல்லூரியில் படித்துக் கொண்டே கிடைத்த சில பகுதி நேர வேலை சுவாராஸ்யமான அனுபவத்தை மை விகடன் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அனுபவம் ஒரு பெரிய திரைப்படத்தில் துணை நடிகர்கள் பட்டாளத்தில் நடித்தது.

மணிரத்தினத்துடன் ஷூட்டிங் அனுபவம்:
ஒரு சனி ஞாயிறு விடுமுறை நாளில் சினிமா துணை நடிகர்களுக்கான ஒரு ஒப்பந்ததாரர் வந்தார்.
ஒரு பட ஷூட்டிங், ஷூட்டிங் ஸ்பாட் வந்து டைரக்டர் சொல்வது போல் கூட்டத்துடன் நடித்தால் மாலையில் சம்பளமும் மதியம் சாப்பிட சோறும் கிடைக்கும் என்று கூறினார்.
இதற்கு முந்தைய காலகட்டத்தில் இதே போன்று விடுதியில் இருந்த மாணவர்களை அழைத்துச் சென்ற அனுபவம் உண்டாம். அடடே... சினிமா ஷூட்டிங் ஸ்பாட் நடிகர்களுடன் நானும் நடிக்கவா என்ற உற்சாகம் பொங்க நானும் சக நண்பர்களுடன் கிளம்பினேன்.
ஒரு வேனில் எங்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு சென்னை காசி மேட்டு கடலோரம் இறக்கி விட்டார்கள்.
' இன்னும் கொஞ்ச நேரத்தில் டைரக்டர், ஆக்டர்ஸ் எல்லாம் வருவாங்க , அவர்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவாங்க அவங்க சொல்வது போல நீங்க நடக்கனும், நடிக்கனும் ' என்று கூறினார் அழைத்து வந்த கான்ட்ராக்டர்.

ஒரு சிறிய மேடை ஒன்றும் அதில் ஏறிச் செல்ல வசதியாக படியும் போட்டு இருந்தார்கள் கடற்கரை ஓரமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் .
சிறிது நேரம் கழிந்தும் தெரிந்தது அது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன் சூர்யா, சித்தார்த் இன்னும் பலர் நடிக்கும் 'ஆயுத எழுத்து ' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் என்று.
மிகவும் உற்சாகமாக இருந்தது எனக்கு. 'பகல் நிலவு, மெளன ராகம், அக்னி நட்சத்திரம், பம்பாய், உயிரே போன்ற படங்களின் டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் நானும் நடிக்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் நான்.
எங்கள் விடுதி மாணவர்கள் போல் இன்னும் பல மாணவர்கள் கூட்டம் இருந்தனர் அங்கே. கொஞ்ச நேரத்தில் ஒரு நான்கைந்து கார்கள் வேன்கள் மொத்தமாக வந்தது .
ஒரே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கிய டைரக்டர் மணிரத்னம் ஷுட்டிங் ஸ்பாட் ஏற்பாடுகளை சுற்றிப் பார்க்கிறார். உடன் இருந்தோர் விளக்குறார்கள் , கவனமாக கேட்டுக்கொண்டே சில குறிப்புகளை கூறுகிறார்.
வேனில் இருந்து ஒரு பெரிய குடையை எடுத்து வந்து அதன் கீழே ஒரு நாற்காலி போட அதில் டைரக்டர் மணிரத்னம் சென்று அமர்ந்து கொள்ள அப்போதைய இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த இயக்குனர் சுசி.கணேசன் மிகவும் பவ்யமாக சில காகிதங்களுடன் இருந்த ஒரு அட்டையை கையில் வைத்துக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் அருகில் சென்று காட்டி கொண்டு இருந்தார் .
இன்றைய நடிகர் கார்த்தி அன்றைய இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அன்றைய கார்த்தி ஓடியாடி வேலைகளை செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஒரு கார் வர அதில் இருந்து இயக்குனர் பாரதிராஜா நடிகராக கருப்புச் சட்டையுடன் இறங்கி வருகிறார். சுசி கணேசன் பாரதிராஜா அவர்களிடம் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளை விளக்கினார்.
கவனமாக கேட்டுக் கொண்டு டைரக்டர் மணிரத்னம் அருகில் சென்று பேசினார். சில நிமிடத்தில் நடிகர் மாதவன் வந்தார். பாரதிராஜாவும் மாதவனும் மணிரத்னம் கூறுவதை கேட்டுக் கொண்டனர்.

மேடையில் நடிகர் பாரதிராஜா பேசி முடிக்க மேடையின் படியில் நிற்கும் நடிகர் மாதவன் கீழே மேடையைச் சுற்றி நிற்கும் எங்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்துக் கத்திட நாங்கள் அனைவரும் உற்சாகமாக கைகளை உயர்த்திக் கத்த வேண்டும். இதுதான் இன்றைய ஷுட்டிங் என்று விளக்கினார்கள்.
மேடையில் ஏறிய பாரதிராஜா கூட்டத்தை நோக்கி ' வடக்கு வாழ்ந்திட தெற்கு தேய்ந்திட வேண்டுமா, வடக்கே பரந்து விரிந்து கிடப்பது தெற்கே வரவர சுருங்குகிறது இது பூகோளத்தின் குறைபாடா இல்லை புத்தியின் குறைபாடா' என்று பேசி முடிக்க நடிகர் மாதவன் உற்சாகமான குரலுடன் எங்களை நோக்கி கைகளை உயர்த்தி ஆட்டிட நாங்களும் கைகளை உயர்த்திக் குரல் கொடுத்தோம்.
ஒரு பத்து முறை நடிகர் பாரதிராஜா பேச நாங்கள் கத்திட என அப்போதைய ஷூட்டிங் முடிந்தது. துணை நடிகர்களாக நடித்த நாங்கள் அனைவரும் வரிசையில் வர வேண்டும் என்று கூறிட மதிய உணவு தயிர் சோறு ஊறுகாய் கொடுத்தார்கள். மதிய உணவு முடிந்ததும் கான்ட்ராக்டர் தன் கமிஷனை எடுத்துக் கொண்டு மீதியை கொடுக்க வாங்கிக் கொண்டு கிளம்பினோம். விடுதிக்கு வந்து சேர்ந்த பின் அடடே என வித்தியாசமான அனுபவமாக இருந்தது அன்றைய பகுதி நேர வேலை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.