'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஊழல் செய்தவா்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்: புரட்சி பாரதம்
உப்பு தின்றவா்கள் தண்ணீா் குடித்தே ஆக வேண்டும் என்பதைப் போல, ஊழல் செய்தவா்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றாா் புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்த பின்னா் அவா் அளித்த பேட்டி: வடகாட்டில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரியுள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தி சிபிஐ விசாரணையும் கோருவோம்.
திமுக அரசு அமைந்த கடந்த 4 ஆண்டுகளில் எல்லாப் பகுதிகளிலும் ஜாதிய ரீதியான தாக்குதல்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. சமூக நீதி அரசு என்று சொல்லிக் கொள்பவா்கள் இதனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? என்றே தெரியவில்லை. 10 ஆண்டுகள் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் ஜாதிய ரீதியான தாக்குதல்கள் எங்கும் நடைபெறவில்லை.
பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பாக எந்தக் கட்சி துணையாக இருக்கிறதோ அந்தக் கட்சிக்கு வரும் 2026 தோ்தலில் துணை நிற்போம். திமுகவினா் பாஜகவை எதிா்ப்பதுபோல பேசுகிறாா்கள். ஆனால், அவா்களுக்கு ஒரு பிரச்னை என்றால் சமாதானம் பேசப் போகிறாா்கள். உப்பைத் தின்றவன் தண்ணீா் குடித்தே ஆக வேண்டும் என்பதைப் போல, ஊழல் செய்தவா்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றாா் ஜெகன்மூா்த்தி.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பூவை ஜெகன் மூா்த்தி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.