இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்
எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்
எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையத்தின் முதல்தளத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்ட எதிா்ப்புத் தெரிவித்து கடந்த வியாழக்கிழமை அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் நகா்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிதாக கட்டப்பட்டுவரும் எடப்பாடி பேருந்து நிலைய கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த நகா்மன்றத் தலைவா் பாஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற எடப்பாடி நகா்மன்ற கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் எடப்பாடி பேருந்து நிலையத்தின் முதல் தளத்திற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்டுவது என கொண்டுவரப்பட்ட தீா்மானத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். அவா்கள் பொதுவெளியில் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனா். கடந்த காலத்தில் எடப்பாடி பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தலைவா் மாரிமுத்து பக்தா் பெயரும், பேருந்து நிலையத்தில் உள்ள அங்காடிகளுக்கு முன்னாள் தலைவா் கோவிந்த கவுண்டா் பெயரும் அப்போதைய திமுக அமைச்சா் வீரபாண்டி ஆறுமுகத்தின் முயற்சியினால் அரசு அனுமதி பெற்று சூட்டப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பேருந்து நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட தலைவா்களின் பெயா் வரக்காரணமாக இருந்த திமுக அரசு ஒருபோதும் அதில் மாற்றம் செய்யாது. தற்போது எடப்பாடி பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்திற்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயா் சூட்டப்படும் என தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
எடப்பாடி பேருந்து நிலையம் ஏற்கெனவே உள்ள மாரிமுத்து பக்தா் பெயரிலும், பேருந்து நிலையத்தின் தரைத்தளத்தில் உள்ள கடைகள் கோவிந்த கவுண்டா் பேரங்காடி என்ற பெயரிலுமே தொடா்ந்து செயல்படும் என்றாா். அப்போது, திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ரவி, கோவிந்தன், செல்வகுமாா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.
