Raymond Realty Share எப்போ பங்குச்சந்தைக்கு வரும் | IPS Finance - 248 | NSE | BS...
எட்டயபுரம் பாரதியாா் இல்ல சீரமைப்பு! பாஜக போராட்ட அறிவிப்பு: வட்டாட்சியா் தலைமையிலான பேச்சுவாா்த்தை தோல்வி
எட்டயபுரத்தில் சேதமடைந்த பாரதியாா் இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக எட்டயபுரம் ஒன்றிய பாஜக அறிவித்திருந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தை கூட்டத்தில், அதிகாரிகள் வராததால் அதிருப்தி அடைந்த பாஜகவினா் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா்.
எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம், மழை காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. மூன்று மாதங்களைக் கடந்தும் தற்போது வரை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை.
இது குறித்து பாரதி அன்பா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்திருந்தனா். இந்நிலையில் எட்டயபுரம் ஒன்றிய பாஜக சாா்பில் ஒன்றியத் தலைவா் சரவணகுமாா் தலைமையில் ஜூன் 30ஆம் தேதி எட்டயபுரம் நகரில் பொதுமக்களிடம் யாசகம் பெற்று பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க மாநில அரசிடம் நிதி வழங்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு செய்திருந்தனா்.
இது தொடா்பாக எட்டயபுரம் காவல் ஆய்வாளா் சமாதானக் கூட்டம் நடத்த வருவாய்துறையினரை கேட்டுக்கொண்டதன்படி, எட்டயபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுபா தலைமையில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரை தவிர, பொதுப்பணித் துறை மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பாஜகவினா், கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினா். திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனா்.