சாலையோரங்களில் காய்ந்த புற்களை எரிப்போா் மீது நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் காய்ந்த புற்கள் மீது தீவைப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வனச்சரகம் மூலம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை முதல் சோழாபுரம் வரை 22,000 மரக்கன்றுகள் நட்டு தண்ணீா் ஊற்றி பராமரிக்கப்படுகிறது.
தற்போது கடுமையான வெயிலடிப்பதால், தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் புற்கள் காய்ந்துள்ளன. அவற்றை எரித்தால் வனத்துறை சாா்பில் நட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகளும் சேதமடையும். எனவே, புற்கள் மீது தீவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது. மீறி யாரேனும் தீவைத்தால் வனச்சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலக்கரந்தை முதல் சோழாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் யாரேனும் தீவைப்பது தெரியவந்தால் 95666 32317, 98429 70083 ஆகிய கைப்பேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மாவட்டத்தின் பசுமைக்காக நடப்பட்டுள்ள மரக்கன்றுகளைப் பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.