சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களோடுதான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம்: கே. என். நேரு
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு இடையில்தான் 10 தேர்தல்களில் வென்றிருக்கிறோம் என்றார் திமுக முதன்மைச் செயலர் கே.என். நேரு.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் கே. என். நேரு பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
திமுகவில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் திமுக கட்சித் தோழர்கள் உற்சாகமாக சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது முறையாக திமுகதான் ஆட்சி அமைக்கும். மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் வருவார்.
நிர்வாகிகளிடம் பேசும் போது அரசு சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கின்றனர். அதையும் நான் குறித்து வைத்துள்ளேன். அரசு சார்பாக செய்ய வேண்டிய பணிகளையும் செய்து முடிப்போம்.
எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலிருந்து திமுகவையும் திமுக தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றைத் தாண்டி தான் பத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி அடைந்துள்ளது.
அதேபோல் இந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். பொதுமக்கள் முழுமையாக தமிழ்நாடு முதல்வருக்குதான் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
எந்தக் காலத்திலும் இதுபோல் திமுக தோழர்கள் உற்சாகமாக இருந்து பார்த்ததில்லை. தற்போது அவர்கள் உற்சாகமாக இருந்து, எங்களுக்கும் உற்சாகமூட்டி இருக்கின்றனர்.
என்னிடம் 41 தொகுதிகளின் பொறுப்பு கொடுத்துள்ளனர். அதில் இரண்டு, மூன்று தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாகத்தான் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி திமுகவுக்கு வேண்டும் என்று அனைவரும் கேட்டுள்ளனர். அதனை முடிவு செய்ய வேண்டியது திமுக தலைவர்தான். நான் முடிவு செய்ய முடியாது என்றார் நேரு.
இதையும் படிக்க: வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 1