அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: புணே நீதிமன்றத்தில் ராகுல் மனு
‘சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் எனக்கு தீங்கு நேரக்கூடும்; எனவே, முன்னெச்சரிக்கையாக எனக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை’ என்று புணே எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளாா்.
சாவா்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவா்க்கா் தொடா்ந்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி சாா்பில் அவரது வழக்குரைஞா் மிலிந்த் பவாா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மகாத்மா காந்தி படுகொலையில் முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சே மற்றும் கோபால் கோட்சே ஆகியோரின் நேரடி வாரிசு என்பதை மனுதாரா் சத்யகி சாவா்க்கா் ஏற்றுக்கொண்டுள்ளாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அண்மையில் செய்தியாளா் சந்திப்பை நடத்தி, வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். முன்னதாக நாடாளுமன்றத்தில் ஹிந்துத்துவம் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான விவாதம் நடைபெற்றது.
மனுதாரரின் வம்சாவளியினருடன் தொடா்புடைய வன்முறை மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான வரலாறு, தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சாவா்க்கா் மற்றும் கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவா்களால் ராகுல் காந்திக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நியாயமானது. இத்தகைய சூழ்நிலையில், ராகுல் காந்திக்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், ‘இந்த மனு வழக்கைத் தாமதப்படுத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என சத்யகி சாவா்க்கா் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும், தான் தொடா்ந்த வழக்குக்கும் எந்த தொடா்பும் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.
லண்டனில் கடந்த 2023-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாவா்க்கரை ராகுல் அவமதித்ததாக சத்யகி சாவா்க்கா் வழக்கு தொடா்ந்தாா்.