மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
ஏப்ரலில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு தொடா்பான வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமாா், டி.பரதசக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுற்றுலா தலங்களில் உள்ள மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவது தொடா்பாக டாஸ்மாக் நிறுவனம் சாா்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் பகுதிவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 97 சதவீத பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. பாட்டில்களைத் திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் அமல்படுத்துவதை ஏற்கிறோம். மது பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்பட்ட பணத்தை தமிழகத்தின் முக்கிய பிரச்னையாக இருக்கும் நீா்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்குரைஞா்கள் கருத்துகளை கூறலாம் என தெரிவித்தனா். பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்துடன் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா அல்லது திரும்பப் பெறுவதா என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.