'ஐ அம் சாரி' செய்யும் மேஜிக் பற்றித் தெரியுமா?
அது ஒரு ரயில் பயணம். இரண்டு மூன்று ,பெட்டிகளுடன் வந்தாள் அந்தப் பெண். அடுத்த சில நிமிடத்தில் பைகளை அடுக்குவது, ஒரு டப்பாவில் மடக்கி வைத்திருந்த சார்ஜர் வயரை எடுப்பது, சீட்டை சரிசெய்வது என மும்மரமானாள்.
எல்லாவற்றையும் முடித்து சீட்டில் அமர்ந்தவள் தன் காலணிகளை முறைப்படுத்தினாள். அவளின் ஒவ்வொரு செயலிலும் பொறுமையும், நேர்த்தியும் இருந்தது. என்னிடம் இல்லாத அந்த நேர்த்தியை அவளிடம் பார்க்கும் போது சற்று வியப்பாகத்தான் இருந்தது. கூடவே நேர்த்தி என்ற வார்த்தையை எனக்கு முதல் முதலாக அறிமுகம் செய்த என் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் சண்முகநாதனும் நினைவுக்கு வந்தார்.

கரும்பலகையில் அவர் எழுதும்போது பலகையில் பட்டு, சுண்ணத்தூள்கள் மழைச்சாரல் போல் அழகாக உதிர்ந்து விழும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் சுண்ணக்கட்டியைப் பிடித்து அவர் எழுதும்போது ராக்கெட் மேழும், கீழும் அசைவதுபோல் தோன்றும். எழுத்துகள் ஒரே வரிசையில் சிற்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதுபோல இருக்கும். அடிக்கடி எங்கள் பக்கமாகத் திரும்பி எழுத்துகளை நேர்த்தியாக எழுதுங்கள் என்பார். குறிப்பாக 'ழ' எழுதும்போது, என் ஊதா மைக்கு மேல் அவரின் சிவப்பு மை திருத்தம் நிச்சயமிருக்கும். கரும்பலகையைப் பார்க்கும்போது நோட்டில் நான் எழுதியதும், அவர் எழுதியதும் ஒரே மாதிரி இருப்பது போல்தான் தோன்றும். பிறகும் ஏன் இவர் திருத்துகிறார் என்ற சந்தேகம். ஒருமுறை கேட்டபோது, 'நீ சரியாக எழுதியிருக்கிறாய். ஆனால் அழுத்தம் திருத்தமாக, வளைவுகளுடன் எழுதினால் நேர்த்தியாக இருக்கும்' என்று பயிற்சி கொடுத்தார். இப்போது 'ழ' என்பதை நான் அழகாக எழுதுகிறேன். ஒவ்வொரு முறை'ழ' எழுதும்போதும் அவரின் விரல்கள் நினைவுக்கு வரும்.
அப்போதிலிருந்து இப்போது வரை நேர்த்தி என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் அதன்பின் இருக்கும் சின்ன மெனக்கிடல்களை பிரதானமாகப் பார்ப்பேன். ஒரு வேலையை சரியாகச் செய்வதற்கும், நேர்த்தியாகச் செய்வதற்கும் நூலிழை வேறுபாடுதான். ஆனால் அதற்கான மெனக்கிடல்களும், அது கொடுக்கும் நம்பிக்கையும் அதிகம். கர்வம் தரும் உணர்வு என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு விஷயத்தை துல்லியமாக செய்ய நினைக்கும் போதெல்லாம் உழைப்பு அதிகமாக இருக்கும், சிலரை பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும், சில நேரங்களில் நம் இயல்பையும் இழக்கவேண்டியிருக்கும்.

எல்லாம் ஓ.கே...இறுதியில் ஒரு வேலையைச் செய்து முடித்த திருப்தி இருக்கும் தானே? என்றால் நிச்சயம் இருக்கும். ஆனால் ஒருவரால் எப்போதும், எல்லா இடத்திலும் நேர்த்தியாக இருக்க முடியுமா? என நான் பலமுறை யோசித்தது உண்டு. இன்று ஒரு நாளாவது நான் செய்யவேண்டிய அனைத்தையும் நேர்த்தியாகச் செய்யவேண்டும் என உறுதிமொழிகளும் எடுத்துத் தோற்றதுண்டு. எல்லா இடத்திலும், எப்போதும் சரியாக, நேர்த்தியாக இருக்கவேண்டும் என்ற மெனக்கிடல்கள் நமக்கு என்ன தரும் என்பதற்கான ஒரு பதிவு இது.
நேர்த்தி... மகிழ்ச்சியைத் தரும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதுதரும் களிப்பில் நான் சரியாக இருக்கவேண்டும் என சின்னச்சின்ன விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்யத்தொடங்குவோம். அலுவலகமோ, வீடோ, ஒரு வேலையை இவரிடம் கொடுத்தால் அதை மறுபரீசிலனை செய்ய வேண்டியிருக்காது என நமக்கு வேலை கொடுத்தவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். நாளடைவில் அவர்களின் பொறுப்புகள் குறைந்து, நமக்குக் கூடுதல்பொறுப்புகள் ஆகும். இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ஒரு வேலைக்காக நாம் போடும் மெனக்கிடல்கள் நாளடைவில், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். என்னிடம் குற்றங்கள், தவறுகள் என்ன இருக்கிறது' என்ற மனநிலையை நோக்கித்தள்ளும். மற்றவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைக்கு வருவோம். அப்படியே ஏற்றுக்கொண்டாலும் அது குற்றஉணர்வில் கொண்டு போய் நம்மை நிறுத்தும்.

ஒரு வேலையைச் செய்யும்போது, சின்னத் தவறுகள்கூட நிகழ்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நிறைய கவனத்துடன் வேலைகளை செய்யத் தொடங்குவோமே தவிர்த்து ரசனையுடன் செய்வதில்லை. ஒரு வேலையை ரசனையுடன் செய்யும் போது வேலை வேலையாக தெரியாமல், நமக்கு பிடித்த ஒன்றாக மாறும். ரசனை குறையும் போது மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவையெல்லாம் தானாக வந்து சேரும்.
பொதுவாக ஓரிடத்தில் தவறுகள் நடக்கும்போது அங்கு ஏதோ ஒரு கற்றல் நிகழும், புதுபித்தல் நிகழும், திருத்தங்கள் நிகழும். அது தான் தொடர் ஓட்டத்திற்கான ஒரு புத்தாக்க மனநிலையைத் தரும்.
எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை தவறுகள் நிகழும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நம்மிடம் இல்லாமல் செய்யும். தவறுகளை மறந்து வாதாடத் தொடங்குவோம்.
அப்படியென்றால் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு குற்றமா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் நாம் சரியாக இருக்க வேண்டும் தான் ஆனால், ஆனால் எல்லா இடத்திலும் சரியாக இருக்கவேண்டும் என நினைக்கும்போது நம்மைச் சுற்றி நிகழும் சின்னச்சின்ன பட்டாம்பூச்சி நிமிடங்களை நாம் ரசிக்க மறந்துவிடுவோம். நாம் செய்யும் செயலில் கவனம் இருக்கலாம். ஆனால் அதில் மட்டும் கவனம் இருந்தால் நம் ரசனைத்தன்மை குறைந்துவிடும். வாழ்க்கையில் திட்டமிடல்கள் இருக்கலாம். ஆனால், நம் திட்டமிடலின்படி வாழ்க்கை நம்மை நகர்த்தாது என்ற புரிதலுடன், தவறுகள் நிகழ்வது சாதாரணம். என கடக்கப் பழக வேண்டும்.

மற்றவர்கள் நம்மை கணிப்பார்கள் என்பதற்காகத் தவறுகளே நிகழாமல் பார்த்துக்கொள்ள மெனக்கிடாதீர்கள். தவறுகளில் கற்றுக்கொள்ள பாடம் இருக்கிறது. 'ஐ அம் சாரி' என்ற வார்த்தை நம்மை நிச்சயம் முழுமையாக்கும். தவறுகளை ஒப்புக்கொள்ளத் துணிச்சல்வேண்டும் என்பார்கள். தவறுகள் துணிச்சலை மட்டுமல்ல, பெருமிதத்தையும் தரும். தவறுகளும் சரிதான் மனசாட்சிக்கு உட்பட்டு மற்றவர்களை பாதிக்காதவரை. உங்கள் மெனக்கிடல்கள் உங்கள் அடையாளம் அல்ல... உங்கள் இயல்பே உங்கள் அடையாளம்.
Imperfect is also a Perfect