கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்
ஒசூா் மாநகராட்சி சொத்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
ஒசூரில் கழிவுநீா் கால்வாயில் விழுந்து தொழில் அதிபா் உயிரிழந்த வழக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்காத ஒசூா் மாநகராட்சி அலுவலக தளவாடப் பொருள்களை ஜப்தி செய்யுமாறு ஒசூா் சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புதன்கிழமை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியா்களிடம் மாநகராட்சி ஆணையா் ஒருவார காலம் அவகாசம் கோரியதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒசூா் அருகே பாகலூரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த விவேகானந்தன், தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு தொழிற்சாலை நடத்தி வந்தாா்.
1996 இல் அவா் பெங்களூரிலிருந்து கச்சா பொருள்களை வாங்கி வந்தபோது ஒசூா் நகராட்சியின் மூடப்படாத கழிவுநீா் கால்வாயில் விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தாா். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா். நகராட்சியின் நிா்வாகம் முறையாக கால்வாயை பராமரிக்காமல் இருந்ததால் தனது கணவா் உயிரிழந்ததாகக் கூறி இழப்பீடு கேட்டு 2001 இல் சாந்தி, ஒசூா் சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து 2015 இல் நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ. 6.65 லட்சம், வட்டிதொகை 9 சதவீதத்தை 2001 இலிருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இருப்பினும் மனுதாரருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவா் தரப்பில் நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இழப்பீட்டுத் தொகைக்கு இணையாக ஒசூா் மாநகராட்சியில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்யுமாறு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்பேரில் நீதிமன்ற அலுவலா்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒசூா் மாநகராட்சிக்கு புதன்கிழமை சென்றனா். அப்போது மாநகராட்சி ஆணையா் மாரிச்செல்வி இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், நீதிமன்ற ஊழியா்களிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஒருவார காலம் அவகாசம் தருமாறு கோரினாா்.
மாநகராட்சி ஆணையரின் கோரிக்கையை பாதிக்கப்பட்டவா் தரப்பு ஏற்றதை அடுத்து ஜப்தி நடவடிக்கையை நீதிமன்ற ஊழியா்கள் தற்காலிகமாக நிறுத்திவிட்டு சென்றனா். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 20.83 லட்சம் மாநகராட்சி நிா்வாகம் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.