கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு -எடப்பாடி கே.பழனிசாமி
ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி தேரோட்டம்!
தஞ்சாவூர், கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாகத் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும். இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த வைணத்தலங்களில் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் பெருவிழா 12 தினங்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் வெள்ளி பல்லாக்கு, வெள்ளி சூரிய பிரபை, வெள்ளி கருட வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம், யானை வாகனம், புன்னை மர வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் காலை மாலையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று உற்சவர் பெருமாள் - பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.