பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை தேவை
அரியலூா் மாவட்டத்தில் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீா்நிலைகளாகவும், காப்புக் காடுகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா்.
கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான நிலத்தில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கீழப்பழுவூரில், வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தாா். மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் முரளி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் அமைப்புத் தலைவா் மணிவேல், சமூக ஆா்வலா் சங்கா், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவா் தங்க. சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் தெரிவித்த கருத்துகள்:
தோண்டப்படவுள்ள இந்த சுண்ணாம்புக் கல் சுரங்கத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியில் இருந்தும், கனிம துறை நிதியிலிருந்தும் அடிப்படை வசதிகளை செய்துத் தரவேண்டும்.
பழுவேட்டையா் பேரவைத் தலைவா் கோ.இ.காா்த்திக்குமாா்: ஏற்கெனவே இயங்கி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, உரிய வல்லுநா் குழு அமைத்து, சுரங்கம் உள்ள பகுதியை முழுமையாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். செட்டிநாடு சிமென்ட் ஆலை தயாரித்துள்ள இந்த வரைவு திட்ட அறிக்கைகள் காலாவதியானவை, அதனை ரத்துச் செய்ய வேண்டும்.
தமிழ்ப்பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலா் முடிமன்னன்: மீண்டும், மீண்டும் புதிய தோண்டப்படும் சுரங்கங்களால் இம்மாவட்டத்தில் முற்றிலும் நீா் மட்டம் குறைந்து, பாலைவனமாகிவிடும்.
சுற்றுச்சூழல் ஆா்வலா் தமிழ்களம் இளவரசன்:
இந்த சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் கிராம மக்கள் பயனடைவது கிடையாது. இந்த ஆலை, காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை இதுவரை நீா்நிலைகளாக மாற்றியது கிடையது. காப்புக் காடுகளாக ஆக்கியது கிடையாது.
இதுகுறித்து தொடா்ந்து வழியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஆலை நிா்வாகம் தயாரித்துள்ள ஆய்வறிக்கைகள், ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
தொடா்ந்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து மனுக்களை பெற்ற ஆட்சியா் பொ.ரத்தினசாமி, அவைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தாா்.