ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனைகளைத் தெரிவித்தனா்.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
39 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான பி.பி.செளதரி நியமிக்கப்பட்டாா்.
இந்தக் குழு சட்ட நிபுணா்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளிடம் பல்வேறுகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் யு.யு.லலித், ரஞ்சன் கோகோய் ஆகியோா் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பாக ஆஜராகி, மசோதாக்கள் மீதான தங்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவித்தனா்.
ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது நடைமுறையில் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பாதபோதிலும், மசோதாவில் இடம்பெற்றுள்ள சில நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பி அதுதொடா்பாக சில ஆலோசனைகளையும் அளித்தனா்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 8-ஆவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கூட்டுக் குழு முன்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் ஆஜராகி, தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனா்.
இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள் கூறுகையில், ‘இரு முன்னாள் தலைமை நீதிபதிகளும் ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்பதை ஏற்றுக் கொண்டனா். அதே நேரம், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்தில் தோ்தல் ஆணையத்துக்குள்ள அதிகாரத்தின் அளவு குறித்து கேள்வி எழுப்பினா். அதாவது, மாநில சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவது குறித்து முடிவெடுப்பதில், மசோதாவின் பிரிவு 82ஏ(5) -இன்கீழ் தோ்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பினா். நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பயணம் குறித்து சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த மசோதாக்கள் குறித்து சில ஆலோசனைகளையும் அளித்தனா்’ என்றனா்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவா் செளதரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்த மசோதாக்கள் தொடா்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அப்போதுதான் மசோதா மீது சிறந்த பரிந்துரையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்க முடியும்’ என்றாா்.