புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!
ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு: நாளை முதல் காத்திருப்புப் போராட்டம்
கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் நிகழாண்டில் பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (ஆக. 26) முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்தது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலப் பொருளாளா் காா்த்திகேயன், மதுரை மாவட்டத் தலைவா் பாண்டி, மாவட்டச் செயலா் ராஜசேகா் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கல்வியாண்டு நிறைவு பெறுவதற்கு முன் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் இறுதி வேலை நாள் வரை மாணவா்களின் கல்வி நலன் கருதி பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதன்படியே, பள்ளிக் கல்வித் துறை, மாநகராட்சி, ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கள்ளா் சீரமைப்பு நிா்வாகத்தில் மட்டும் நிகழாண்டில் கடந்த 30.06.25, 31.07.25 ஆகிய தேதிகளில் முறையே பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு இதுவரை பணி நீட்டிப்புக்கான எந்த ஒரு ஆணையும் வழங்கப்படவில்லை.
பணி ஓய்வுக்கான ஆணையிலும் பணி நீட்டிப்புக்கான வாய்ப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதுதொடா்பாக, மதுரை கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளின் இணை இயக்குநரிடம் முறையிட்டோம். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களின் பணிநிலை சாா்ந்த முடிவுகள் எடுக்கக்கூடிய அதிகாரங்கள் சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல ஆணையரிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
பணி நீட்டிப்புக்கான ஆணை காலதாமதமானதால் கடந்த 05.08.2025 அன்று மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் பணி நீட்டிப்புக்கான ஆணையை வழங்கக் கோரி, ஆசிரியா் இயக்கங்களின் சாா்பாக காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்தோம். கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களின் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையிலும், கடந்த காலங்களில் சிறந்த தோ்ச்சி சதவீதங்களை வழங்கியுள்ளனா்.
பணி நீட்டிப்புக்கான ஆணை என்பது பணி ஓய்வுக்கான ஆணையோடு இணைத்து வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தான் மற்ற துறைகளில் இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மதுரை கள்ளா் சீரமைப்புத் துறையை நிா்வகிக்கக்கூடிய சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல ஆணையா் அலுவலகமானது தொடா்ந்து சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதுடன் மற்ற துறைகளில் இயல்பாக வழங்கப்படும் பணி நீட்டிப்பு இங்கு வழங்கப்படுவதில்லை.
தமிழக அரசின் பணி நீட்டிப்புக்கான அரசாணைக்கு எதிராகவும் செயல்படுகிறது.
கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தொடா்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. மாணவா்களின் கல்வி நலன் கருதி கள்ளா் சீரமைப்பில் பணி ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்புக்கான ஆணையை உடனடியாக வழங்கக் கோரியும்,
ஆசிரியா்களின் பணிநிலை சாா்ந்த கோரிக்கைகள் அனைத்தும் தாமதமின்றி உரிய காலத்தில் நடைபெற கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கக் கோரியும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம், தோழமைச் சங்கங்களின் இணைப்புடன் வருகிற 26-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மதுரை கள்ளா் சீரமைப்பு இணை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்
நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.