கடந்த 7 நாள்களில் 5,037 பேருக்கு கரோனா!
அமெரிக்கா மற்றும் ஆசியாவில் கடந்த 7 நாள்களில் 5,037 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பானது சிங்கப்பூர், ஹாங் காங், தாய்லாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் திடீரென அதிகரித்து வருவதாகவும், இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய கரோனா பரவலுக்கு ஒமைக்ரானின் திரிபு வகையான ஜே.என். 1, என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 ஆகியவையே காரணம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் மட்டுமே கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கலிஃபோர்னியா, வாஷிங்டன், விர்ஜினியா மற்றும் நியூ யார்க் ஆகிய நகரங்களில் என்பி.1.8.1 மற்றும் எல்எஃப் .7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா பரவல்
இந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தில் அதிக கரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இதுவரை 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், தில்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் மகாராஷ்டிரத்தில் 43 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 209ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஜார்க்கண்ட்டில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தாணேயில் 21 வயது இளைஞர் கரோனா பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். மும்பையில் கரோனா பாதிப்புக்கு 4 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இவர்களில் பெருபாலானோர் இளைஞர்களே.
இதனால், 18 வயது பூர்த்தி அடைந்த பலரும் கரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதுவரை ஒமைக்ரான் பூஸ்டர் தடுப்பூசியை வெறும் 18% மக்கள் மட்டுமே போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.