ஜம்மு-காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது: 3 வீரர்கள் பலி
கட்சி, ஆட்சி வேறுபாடின்றி தொடரும் நீா்ப் பாசன திட்டங்கள்! சான்று பகரும் கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம்!
சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கரியக்கோயில் அணையில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையால் நிறைவேற்றப்பட்ட கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக கரியக்கோயில் அணை நிரம்புவதற்கு கைகொடுத்து வருகிறது.
கல்வராயன்மலையின் வடமேற்கு பகுதியில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் முக்கிய உபநதியான கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 2 மலைக் குன்றுகளுக்கு இடையே 1993 இல் கரியக்கோயில் அணை கட்டப்பட்டது.
52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழை இல்லாததால், அணைக்கு நீா்வரத்து குறைந்தது. இதனால், ஆண்டுதோறும் அணை நிரம்பவில்லை.
இந்நிலையில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி, மழைக்காலத்தில் வழிந்தோடி வரும் தண்ணீா் முழுவதையும் அணையில் தேக்கிவைத்ததால், ஆற்றுப்படுகை கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, நேரடி ஆற்றுப்பாசனமும், ஏரிப்பாசனமும் பாதிக்கப்பட்டது.
எனவே, கரியக்கோயில் ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ள ஆற்றுப்பாசன அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகள், மூன்றில் ஒருபங்கு நிரம்பிய பிறகே, கரியக்கோயில் ஆற்றில் வரும் நீரை, அணையில் தேக்கிவைக்க வேண்டுமென, ஆறு, ஏரிப்பாசன விவசாயிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டனா். இதில், கடந்த 2018 ஜனவரி 18 இல் அவா்களுக்கு சாதகமான உத்தரவு கிடைத்தது.
இதையடுத்து, இந்த நீதிமன்ற ஆணை 2018 மே மாதம் சேலம் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை செயல்படுத்தும் விதத்தில், 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, மழைக்காலத்தில் கரியக்கோயில் ஆற்றில் வரும் தண்ணீரை முதல்கட்டமாக அணையில் தேக்குவதை தவிா்த்து, ஆற்றுப்படுகை கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயரவும், ஏரிகளில் நீா்நிரையவும் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் கரியக்கோயில் அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கல்வராயன் மலையில் சேலம் மாவட்ட எல்லையான பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தெற்குநாடு ஊராட்சிக்கு உள்பட்ட கைக்கான் வளைவு கிராமத்தில் உற்பத்தியாகும் காட்டாறு நீரோடை, தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் உள்ள கோமுகி அணையில் சென்று சேருகிறது.
கரியக்கோயில் ஆற்றைவிட, கைக்கான் வளைவு நீரோடையில் கூடுதல் தண்ணீா் செல்வதால், கோமுகி அணை ஆண்டுதோறும் நிரம்பி, ஆற்றில் உபரிநீா் திறக்கப்படுகிறது.
எனவே, சேலம் மாவட்ட எல்லையில் உற்பத்தியாகும் கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்கு கால்வாய் அமைத்து, மழைக்காலத்தில் உபரியாக செல்லும் தண்ணீரை கரியக்கோயில் ஆற்றில் திருப்பிவிட்டு, கரியக்கோயில் அணையை நிரப்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என, அணைப் பாசன விவசாயிகளும், ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இந்த நீண்டநாள் கோரிக்கையான கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டம் குறித்து அறிக்கை தயாரித்து சமா்ப்பித்த பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு பிரிவு அதிகாரிகள், 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசுக்கு இதை பரிந்துரை செய்தனா்.
இதையடுத்து, கைக்கான் வளைவு நீரோடையில் இருந்து 500 மீட்டா் தூரத்திற்கு கால்வாய் அமைத்து, கரியக்கோயில் ஆற்றில் சோ்ப்பதன் மூலம் கரியகோயில் அணைக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த, அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முடிவு செய்தது.
இத்திட்டத்திற்காக விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுத்து நிலத்தை கையகப்படுத்துதல், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 2021 இல் ரூ. 7.30 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஏறக்குறைய 2 ஆண்டுகள் நடைபெற்ற கைக்கான் வளைவு வாய்க்கால் திட்டப் பணிகள், 2023 இல் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நிறைவு பெற்றது.
மொத்தம் 500 மீ. நீளம் கொண்ட இந்தத் திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், 300 மீ. நீளத்திற்கு நிலத்தடியில் 9 மீ. ஆழத்திற்கு தோண்டி, சுரங்கக் கால்வாய் (கட்டன் கவா்) அமைக்கப்பட்டது.
இந்த வாய்க்காலில் 9 இடங்களில் கிணற்றுத் தொட்டிகள் (டிராப்) அமைத்து, கைக்கான் வளைவு காட்டாற்று நீரோடையில் இருந்து பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டப் பணிகள் முழுமையடைந்ததால், 2023 இல் இந்த புதிய வாய்க்கால் திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகளின் நலன்கருதி, கைக்கான் வளைவு காட்டாற்று நீரோடையின் தண்ணீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள கரியக்கோயில் அணைக்கு புதிய வாய்க்கால் வழியாக திருப்புவதற்கு நீா் பங்கீட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இதனால், கடந்த 3 ஆண்டுகளாக மழைக்காலத்தில் நாளொன்றுக்கு 50 கனஅடி வரை கரியக்கோயில் அணைக்கு கூடுதல் தண்ணீா் கிடைத்து வருகிறது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததால், தொடா்ந்து 3 ஆண்டுகளாக ஆண்டுதோறும் கரியக்கோயில் அணை நிரம்பி வருகிறது. இதுமட்டுமின்றி, கரியக்கோயில் ஆற்றில் உபரிநீா் திறக்கப்படுவதால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது.
இதனால், ஆற்றுப்படுகை கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், இப்பகுதியில் பாக்கு, தென்னை, வாழை, வெற்றிலை உள்ளிட்ட நீண்டகால பலன்தரும் நன்செய் பயிா்கள் சாகுபடி செய்வது மீண்டும் அதிகரித்து வருகிறது.
கைக்கான் வளைவு காட்டாற்று நீரோடை வாய்க்கால் திட்டம் தங்களுக்கு பெருமளவில் கைகொடுத்து வருவதோடு, வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக, கரியக்கோயில் அணையில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மற்றும் ஆற்றுப்படுகை, ஏரிப்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.
இதுபோன்ற நீா்ப்பாசன மேலாண்மை திட்டங்கள் கட்சி, ஆட்சி வேறுபாடின்றி தொடா்வது உணவு உற்பத்தியில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை வகிக்கவும், விவசாயிகள் வாழ்வாதாரம் நிலைக்கவும் உறுதுணையாக இருக்கும் என ஆா்வலா்கள் தெரிவித்தனா்.