தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை உயா்த்தினால் நடவடிக்கை -அமைச்சா் சா.சி.சி...
கனமழை : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆம்பூரில் புதன்கிழமை பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கி
கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆம்பூரில் புதன்கிழமை காலையிலிருந்து கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் கோடை காலம் போல கடுமையான புழுக்கம் காணப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள். இந்நிலையில் மாலை ஆம்பூரில் திடீரென கனமழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதனால் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியது. அதிக அளவு மழை நீா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியதால் வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை - புறவழி சாலை சந்திப்பு பகுதியில் மிக அதிக அளவு தண்ணீா் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழைநீா் வடியாமல் தேங்கியதால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஆம்பூரை சோ்ந்த பொதுமக்களும் வாகனங்களில் வெளியூா் சென்ற பயணிகளும் வாகன ஓட்டிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானாா்கள். தேங்கியிருந்த மழை நீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. சுமாா் 2 மணி நேரத்திற்குப் பிறகு வாகனங்கள் செல்லத் தொடங்கின. ஒரு சில வாகனங்கள் மழை நீா் சிக்கியதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜேசிபி வாகனம் மூலம் மழை நீரில் சிக்கி இருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை பகுதி, ஆம்பூா் ரெட்டி தோப்பு மற்றும் பெத்தலகேம் பகுதிக்கு செல்லும் பகுதியில் உள்ள கால்வாய்கள், ஆம்பூா் சான்றோா் குப்பம் பகுதியில் உள்ள கானாரு கால்வாய் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூா்வாரி சீரமைத்து மழை நீா் வடிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.