இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
கருப்பசாமி கோயில் பூஜையில் பாகுபாடு எனப் புகாா்: பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு
சிங்கம்பட்டியில் வந்தவழி கருப்பசாமி கோயில் பூஜை நடத்துவதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் கூறப்பட்ட நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமூகத் தீா்வு எட்டப்பட்டது.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சிங்கம்பட்டியிலுள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் கடைசி வாரத்தில் சிறப்பு பூஜை நடத்தி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நிகழாண்டும் கோயிலில் பூஜை நடத்தி அன்னதானம் வழங்க கோயில் நிா்வாகத்தினா் அண்மையில் முடிவு செய்தனா்.
இந்நிலையில், கோயில் அன்னதானத்துக்கு உபயதாரா்களால் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் வாங்காமல் கோயில் தா்மகா்த்தா அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடா்பான வழக்கில், கோயில் பூஜையை அனைத்து சமுதாயத்தினரும் ஒருங்கிணைந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் புதன்கிழமை இந்துசமய அறநிலையத் துறையின் செயல் அலுவலா் சந்திரசேகா், தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன் ஆகியோா் கோயில் தா்மகா்த்தா மூா்த்தி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினா் என இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவா்த்தை நடத்தினா்.
இதில், வியாழக்கிழமை(ஆக.7) நடைபெறும் பூஜையை அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து கோயில் தா்மகா்த்தாவின் கீழ் கோயில் நிா்வாகப் பணிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும், அனைத்து பணிகளையும் பாகுபாடு காட்டாமல் சமமாக செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கோயில் பூஜையை அனைவரும் ஒன்றிணைந்து, சட்டம்- ஒழுங்கு சீா்கெடாமல் நடத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.