கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! - என்ன நடந்தது?
கரூர் சம்பவம்
தவெக தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. அந்த ஆணையமும் விசாரணையைத் தொடங்கி உள்ளது.
மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,``கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.
கைது
அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளைப் பதிவு செய்த 3 பேரை நேற்று காவல்துறை கைது செய்திருக்கிறது.
இதில் ஒருவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர், மற்ற 2 பேரும் த.வெ.க-வைச் சேர்ந்தவர்கள். இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலையில் 7.30 மணிக்குக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை காவல் ஆணையரகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.