கரூர் விஜய் பிரசாரத்தில் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த 2 பேர் பலி!
வெள்ளக்கோவில்: கரூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசார பயணம் மேற்கொண்டார்.
நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி கூட்டம் அலைமோதியது.
இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அங்கு சென்றிருந்த வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் ஜெயப்பிரகாஷ் மனைவி கோகுலபிரியா (29) நெரிசலில் சிக்கி பலியானர். இவருடைய கணவர் ஜெயப்பிரகாஷ் விசைத்தறி பட்டறை வைத்துள்ளார். இவர்களுக்கு நான்கு வயதில் கௌசிகா என்கிற ஒரே பெண் குழந்தை உள்ளது. கோகுலபிரியா கட்சிக்காரர் கிடையாது. விஜய்யை பார்க்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதே போல, வெள்ளக்கோவில் காமராஜபுரத்தைச் சேர்ந்த தவெக உறுப்பினர் சாக்கு வியாபாரி மணிகண்டன் (33) என்பவரும் பலியானார். அவருக்கு மனைவி நிவேதிதா (32), வெள்ளக்கோவில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள் ரக்ஷபிரீத்தா (9), மகன் விசாகன் (3) உள்ளனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உயிரிழந்த இரண்டு பேருடைய வீட்டுக்கும் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று, குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்தார்.
இதையும் படிக்க: இனி விஜய்யின் பேச்சு தொடருமா?
Two people from Vellakovil were killed in a stampede during a campaign rally for Tvk leader Vijay in Karur on Saturday night.