நேபாள மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி நிறுவனர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன்!
காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி!
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் புத்த பிக்குகள் பேரணியும், புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட புத்த ஸ்தூபி திறப்பு விழா மற்றும் திரிபிடக சத்தம்மம் ஓதுதல் நிகழ்வும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சிறுபான்மையின ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் பேரணி நடைபெற்றது. வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட புத்தக பிக்குகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணி காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் பகுதியிலிருந்து புறப்பட்டு பழைய ரயில் நிலைய சாலை வழியாக வையாவூரில் உள்ள புத்தர் திருக்கோயிலில் வந்து நிறைவுபெற்றது. பேரணியின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் புத்தர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பேரணியில் வந்த பலரும் தேசியக்கொடி மற்றும் பௌத்தக் கொடியினை கையில் ஏந்தியவாறு பாலி மொழியில் பிரார்த்தனை செய்தனர்.

பேரணி புத்தர் திருக்கோயில் வந்து சேர்ந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து புத்தரின் அஸ்தி வைக்கப்பட்ட ஸ்தூபி திறப்பு விழா நடைபெற்றது. பேரணியிலும் திறப்பு விழாவிலும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சங்காதிபதி தம்மசீலன், சங்க துணைத் தலைவர்கள் பதாந்த். நாகராஜ், புத்தப் பிரகாசம், செயலாளர் போதி.அம்பேத்கர் மற்றும் நிர்வாகிகள் ஜெயசீலன், குணசீலன், ஜீவசங்க மித்திரன் ஆகியோர் உள்பட 200க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் கலந்து கொண்டனர்.
ஸ்தூபி திறப்பு விழாவையடுத்து தாய்லாந்து புத்த பிக்குகள் காஞ்சிபுரத்திற்கு வழங்கிய புத்தரின் சீடர்களான மகா மக்லானா மற்றும் சாரி புத்தா என்ற இருவரின் உருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் புத்தர் வழங்கி பஞ்சசீலம் போதனைகளைப் பௌத்தர்களுக்கு பிக்குகளால் வழங்கப்பட்டது. பின்னர் புத்தர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் புத்த பிக்குகள் தனித்தனியாக அமர்ந்து உலக நன்மைக்காகவும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் உலக திரிபிடக ஓதுதல் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வுகளில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ச. மு. நாசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சிறுபான்மையின ஆணையத்தின் தலைவர் சொ. ஜோ. அருணசேச, ஆணைய உறுப்பினர்கள் பௌத்த இயக்கத் தலைவர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளைப் பௌத்த சங்கப் பேரவை நிறுவனர் ஜா. கௌதம சென்னா, செயலாளர் போதி. அம்பேத்கர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.