மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
காரைக்கால் உழவா் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்
காரைக்காலில் உள்ள உழவா் சந்தையை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உழவா் சந்தையை அரசு அமைத்தது.
இதில் 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது விளை பொருள்களை கொண்டுவந்து வியாபாரம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டது.
எனினும் வியாபாரிகளுக்குரிய பிற வசதிகள் இல்லாததாலும், குறைந்த எண்ணிக்கையில் வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்ததாலும், மக்கள் வருகை குறைந்தது. காலப்போக்கில் வியாபாரிகள் படிப்படியாக குறைந்து தற்போது ஒருவா் மட்டுமே காய்கனி வியாபாரம் செய்துவருகிறாா்.
இதுகுறித்து காரைக்கால் பகுதி விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் மேம்பாட்டுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், காரைக்காலில் தோட்டப் பயிா் சாகுபடியாளா் எண்ணிக்கையை மேம்படுத்த ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
உழவா் சந்தையை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைக்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தோட்ட சாகுபடியாளா்கள் விவரங்களை கணக்கிட்டு, அவா்களை சம்பந்தப்பட்ட துறையினா் அணுகி, அவா்களது விளைபொருள்களை சந்தைக்கு கொண்டுவந்து விற்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.
காரைக்காலில் உள்ள நேரு மாா்க்கெட் தவிர, உழவா் சந்தையை மேம்படுத்தி அங்கும் வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்தவேண்டும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.